Skip to main content

மேய்ப்பர் யார்?

----------------------------------

“ஆடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம்“
இது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த அம்சம்.
இதுசம்பந்தமாக ஆடு மேய்க்கும் ஒரு பையனிடம் பகல் 10 மணிக்கு ஆபீஸ் ஆரம்பிக்கும் நேரத்தில் கேட்டபோது “உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தா ஆடுக காணாமப் போயிரும்... அடுத்தவன் வுட்டு நெலத்துல வாய வச்சுச்சுன்னா நாந்தான் தெண்டங்கட்டனும்... சாயந்தரமா வாங்க”ன்னுட்டான்.
நம்மளவிட பிஸியான ஆளா இருப்பான்போலனு பொழுதுசாய அவன மீட் பண்ணலாம்னு பாத்தா, அப்பவும் அவன் பயங்கர பிஸி.
பட்டியில் சேர்ந்த ஆடுகளை கண்களாலேயே அளவெடுத்தான்... அவனுக்கு எண்ணத் தெரியாது... ஆனால் எல்லா ஆடுகளின் அடையாளமும் தெரியும்... ஒண்ணொண்ணுக்கும் அடையாளம் வச்சிருப்பான்.
‘வாய்ல மட்டும் வெள்ளை விழுந்த ஆடு, கொம்பு நெளிஞ்ச ஆடு, காது சுருங்குன ஆடு’ இப்டின்னு...
அதுபடி பாக்கும் போது காது சுருங்குன ஆட்டக் காணாம்... அது எங்கனுன்னு தேடிப்போனான். நான் பின்னாடியே போனேன்...
அந்த ஆடு அஜய்குமாரோட (என்னடா கிராமத்துல அஜய்குமாரா னு கேக்காதீங்க... இங்க அஜித் குமார், நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்றெல்லாம்கூட பெயர்கள் இருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் கோபர்நிகஸ் என்ற வார்த்தையை குளோப்ஜாம் என்று கூப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்)  நெலத்துல விளைஞ்ச கம்மங்கருத கடிச்சிருச்சின்னு புடிச்சி வச்சிக்கிட்டான்...
என் கூட பேசுனா தெண்டங்கட்டனும்னு சொன்னான்... வேற யாரோ என்ன மாதிரி அடுத்ததா அறிக்கை பத்தி விசாரிக்க வந்திருப்பான் போலன்னு நினைச்சிக்கிட்டேன்...
ஒருவழியா மன்னிப்புக் கேட்டு, கடிச்சி வச்ச கருதுக்கெல்லாம் கணக்குப் பாத்து காசு குடுத்திட்டு வந்தபிறகு என் பக்கத்துல உக்காந்தான்.
“பத்திங்களா எங்க பொழப்ப?” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு “இப்ப என்னய்யா வேணும் உனக்கு?” என்றான்.
“ஆடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம்னு சீ” என்று சொல்லி முடிப்பதற்குள்...
“அடச்சீ நிறுத்துய்யா... என்னை ஒழுங்கா படிக்க வச்சிருந்தா நான் ஏன்யா ஆடு மேய்க்கிறேன்...” என்று சொல்லி கோபத்தோடு எழுந்திருக்க முயன்றான்...
“இருப்பா... கோபப்படாத” என்று அமர்த்தினேன்...
“ஆடு மேய்க்கிறத அரசு வேலையா ஆக்குவோம்ன்றீங்க... குப்பை அள்ளுறதுகூடதான் அரசு வேலை... அதை நீ செய்வியா? அதுக்குன்னு ஒரு சமூகத்தை தான வச்சிருக்கீங்க? எங்கள மேலும் மேலும் இதுக கூடயே வாழ வைக்கணும்... எந்த பெரிய வேலைக்கும் நாங்க போயிறக்கூடாது... அப்டித்தான?” என்று சொல்லிவிட்டு போயே விட்டான்...
ஆடுகள் “மே...16” என்று கத்தின.

Comments

Popular posts from this blog

வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் சக்தியா மோடி?

மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன... அவ்வளவுதான்... இந்த ஒற்றைவாதம் மட்டும்தான்.... இதைத்தான் பாஜக, சீமான் போன்றோர் கூறிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அடுத்ததாக இதே கருத்தைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக பாஜக தலைவராக ஆகி விடும் அளவுக்கு இருந்தது. "நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்" என்று அவர் அடுக்கிய வரிசைக்கிரமங்கள் ராஜீவுக்கு அடுத்து பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெ...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...