Skip to main content

இரு வண்டியில் சவாரி செய்தவர் குப்புற விழுந்த கதை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் தலைமையிலான கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுகவினர் சிலர் முதன்முதலாக ஆரம்பித்து வைத்தார்கள் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தை சந்திக்கும் படலத்தை...
அதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வந்து நலம் விசாரித்து விட்டுப்போனார். இது சாதாரண சந்திப்புத்தான் அரசியல் இல்லை என்று இருதரப்பினரும் சொன்னார்கள்.
விஜயகாந்த் உங்களோடு கூட்டணி வைக்கப்போகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் உங்கள் நல்ல எண்ணம் நிறைவேறட்டும் என்று மட்டும் சொல்லி வைத்தார்.
அடுத்ததாக ரஜினிகாந்த் வந்து பார்த்துவிட்டுப்போனார். ரஜினிகாந்த் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டதால் இது சாதாரண சந்திப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். அவர் யாருக்கேணும் ஆதரவு தெரிவிக்கலாம் என்று அறிவுரைகூட சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் என்று நாம் ஒருவாறாக உணர்ந்து கொள்ளலாம்.
அதன்பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் விஜயகாந்தை தொடர்பு கொண்டு கமல் சந்திக்க நேரம் கோரினார்கள்.
இத்தனை சந்திப்புகள் நிகழ்ந்த பின்னரும் கிணற்றில் போட்ட கல்லாக இந்த நிகழ்வுகள் நடந்தேறின. அதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் அவரது தம்பி சுதீஷ், மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் தேமுதிகவின் பலத்தை வானளாவ புகழ்ந்தார்கள். தாங்கள் இல்லையென்றால் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற முடியாது என்ற அளவுக்கு அவர்களின் பேச்சு அமைந்திருந்தது.
அதன்பிறகு வந்த செய்திகள் விஜயகாந்த் அதிமுக பக்கம் சாய்ந்துவிடுவார் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தின. இதனால் இனி நம்முடன் வர மாட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட திமுக 20 க்கு 20 என்ற அளவில் கூட்டணி அமைத்து தனது நிலையை தெளிவுபடுத்தி அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.
இந்நிலையில் திடீரென்று மீண்டும் திமுக பொருளாளர் துரைமுருகனை தொடர்பு கொண்ட சுதீஷ், அதிமுகவில் சேருவது பிடிக்கவில்லை திமுகவிடம் வருகிறோம் என்று கூறியிருக்கிறார். இதனால் காண்டான துரைமுருகன் "கூட்டணிக்கதவுகள் சாத்தப்பட்டு விட்டன. தலைவர் ஊரில் இல்லை. வந்தவுடன் சொல்கிறேன். உங்களுக்கு கொடுக்க எங்களிடம் சீட் இல்லை. உங்கள் பலத்திற்கு ஏற்ற அளவில் சீட் கொடுக்கும் கட்சியுடன் சேருங்கள்" என்று கிண்டலாவே கூறிவிட்டார்.
இப்படி ஒரே நேரத்தில் இரு வண்டியில் சவாரி செய்ய தேமுதிக முயன்றிருப்பது அரசியல் அரங்கில் தேமுதிக மீது தவறான பார்வையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் சுதீசும், பொருளாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் ஆகியோர்தான் காரணம் என்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் புலம்புகிறார்கள்.
வடிவேல் ஒரு படத்தில் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது "நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும்..."
வாக்கு அரசியலில் அனைத்துமே சரிதான். ஆனால் கூட்டணி அமைப்பதில் ஒரு நெறிமுறையையாவது கடைப்பிடிக்க வேண்டாமா?

Comments

Popular posts from this blog

வெற்றிதோல்வியை தீர்மானிக்கும் சக்தியா மோடி?

மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடிக்காதவர்கள் அளித்த வாக்கு... மோடியை பிடித்தவர்கள் அளித்த வாக்கில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது... மோடியைப் பிடிக்காதவர்கள் அளித்த வாக்குகளில் எல்லாம் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன... அவ்வளவுதான்... இந்த ஒற்றைவாதம் மட்டும்தான்.... இதைத்தான் பாஜக, சீமான் போன்றோர் கூறிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அடுத்ததாக இதே கருத்தைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக பாஜக தலைவராக ஆகி விடும் அளவுக்கு இருந்தது. "நேரு காலத்துக்குப் பிறகு இந்திரா காந்தி, மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு மிக்க தலைவராக விளங்கினார். அதற்கு பிறகு ராஜீவ் காந்தியும் மக்கள் தலைவராக உருவெடுத்து வந்தார். இதன் பிறகு வாஜ்பாய் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவராக இருந்தார். இப்போது மோடி மக்களின் ஆதர்ஷ நாயகனாக உள்ளார்" என்று அவர் அடுக்கிய வரிசைக்கிரமங்கள் ராஜீவுக்கு அடுத்து பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற தலைவர்கள் யாரும் உருவெடுக்கவில்லை என்கிற ரீதியிலேயே அமைந்திருந்தன. நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெ...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...