Skip to main content

தும்பிக்கை பெரிதான ரகசியம்!

யானையின் மூக்கு, அதான் தும்பிக்கை எப்படி இருக்கும்? பாதத்தைத் தொடும் அளவுக்கு நீண்டு வளைந்து இருக்கும் அல்லவா? ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தும்பிக்கை அப்படி நீண்டு இருக்கவில்லை. அது குட்டையாகவே இருந்தது. அப்புறம் எப்படி அது நீண்டது?
ஒரு காட்டுல தம்புன்னு யானைக் குட்டி ஒன்று இருந்தது. குட்டையாக இருக்கும் தும்பிக்கையை பெரியதாக மாற்றவேண்டும் என்று அது நினைத்தது. எப்போ பார்த்தாலும் தன் அம்மாவிடம் ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கும் பழக்கமும் அதற்கு உண்டு. அதுவும் காட்டுல இருக்குற மற்ற விலங்குகளைப் பற்றிதான் கேட்கும்.
நெருப்புக்கோழி பறவைக்கு பெரிய இறக்கைகள் ஏன் இருக்கு? ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து ஏன் மேலே நீண்டு இருக்கு? இந்த நீர்யானையோட கண்கள் எப்போதும் சிவப்பாகவே இருக்குதே? எலுமிச்சம் பழச் சுவையை குரங்குகளுக்கு ஏன் பிடிக்கிறதில்லை?,
முதலைகள் இரவு நேரத்தில் உணவை எப்படித் தேடும்? – தினமும் இப்படி ஏதாவது கேள்வியை அம்மாவிடம் தம்பு கேட்டுக்கிட்டே இருக்கும். ஆனால், சில சமயம் அம்மா யானை பதில் சொல்லும். சில சமயம், “உனக்கு வேலையே இல்லையா?”ன்னு செல்லமாகத் திட்டும்.
ஒரு நாள் எல்லா விலங்குகளும் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தன. அப்போது, தம்பு இப்படி கேள்விகளை கேட்க ஆரம்பித்தது. உடனே மற்ற விலங்குகள், “உஷ்ஷ்ஷ்ஷ்....... ஷ்....... ஷ்.......ஷ்.. அமைதியா இரு” என எச்சரிக்கை செய்தன.
ஆனால் குட்டி யானை தம்பு அமைதியாக இருக்கவில்லை. வாய் ஓயாமல் ஏதேதோ கேட்டுக்கொண்டே இருந்தது.
தம்புவின் இந்த செயலால் கோபமடைந்த பஞ்சவர்ணக்கிளி, “உனக்கென்ன முதலைகள் தங்களோட இரவு உணவை எப்படித் தேடிக்கொள்கின்றன என்பதற்கு விடைதானே... நான் சொல்கிறேன்...” என்றது.
“உண்மையாகவா?” ஆச்சரியத்தோடு கேட்டது குட்டியானை.
“உண்மையாகத்தான்... சேரும் பாசியும் அடங்கிய நீர் நிலைக்கு போ... அங்கு சென்றால் முதலைகள் எப்படி இரவு உணவைத் தேடிக்கொள்கின்றன என்று உனக்குத் தெரியும்...” என்றது பஞ்சவர்ணக்கிளி.
கிளி சொன்னபடியே நீர்நிலைக்குச் செல்லத் தயாரானது தம்பு. தனக்குத் தேவையான வாழைப்பழங்கள், பலாப்பழத்தை எடுத்துக் கொண்டு நீர்நிலையைத் தேடிச் சென்றது தம்பு.
சிறிதுதூரம் நடந்த பின் ஒரு நீர்நிலை தென்பட்டது.
அமைதியாக இருந்த அந்த நீர்நிலையின் பக்கத்தில் நின்றுகொண்டு, பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்தது தம்பு.
அப்போது நீர்நிலையில் சிறிய அசைவு தெரிந்தது. தம்பு கூர்ந்து பார்த்தது.
அந்தநேரம் நீர்நிலையில் இருந்து ஒரு உருவம் வெளியே வந்தது. கரையில் குட்டி யானை ஒன்று நிற்பதைக் கண்ட முதலை, கண்களைச் சிமிட்டிக் கொண்டது.
உற்சாகம் அடைந்த தம்பு, “உனக்காகத்தான் ரொம்ப நேரமாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்... உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்... உனது இரவு உணவை நீ எப்படித் தேடிக்கொள்கிறாய்...?” என்று கேட்டது.
“ஓ.... அதுவா... பக்கத்துல வா... சொல்கிறேன்...” என்றது முதலை.
ஆர்வமிகுதியால் ஆபத்தை உணராமல் முதலையின் அருகே சென்றது தம்பு. இதுதான் சரியான நேரம் என்று நினைத்த முதலை, லபக் என்று குட்டி யானையின் தும்பிக்கையைக் கவ்வியது.
தான் பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டு விட்டோம் என்பதை உணர்ந்த தம்பு, தும்பிக் கையை விடுவிக்க படாதபாடு பட்டது.
தும்பிக்கையைப் பிடித்த பிடியை விடாமல் தண்ணீருக்குள் தம்புவை இழுக்க முயற்சி செய்தது முதலை.
முதலை தண்ணீருக்குள் இழுக்க... தம்பு வெளியே இழுக்க... தும்பிக்கை நீண்டுகொண்டே போனது.
ஒரு கட்டத்தில் தன் சக்தியை எல்லாம் திரட்டி வெடுக்கென்று தும்பிக்கையை வெளியே இழுத்தது தம்பு. ஆபத்திலிருந்து விடுபட்டு, தடுமாறியபடி தரையில் விழுந்தது.
காயம்பட்ட தன் தும்பிக்கையை பரிதாபமாகப் பார்த்தது தம்பு.
அது முன்பைவிட மேலும் நீண்டு இருந்தது. முதலையின் பற்கள் பட்டதால் ஆங்காங்கே வரிவரியாகவும் இருந்தது.
“ தும்பிக்கை பெரியதாகிவிட்டதே” என்று தம்பு நினைத்துக்கொண்டிருந்தபோது அங்கு பஞ்சவர்ணக்கிளி வந்தது.
“தும்பிக்கை மிகவும் குட்டையாக இருக்கிறது என்று கவலைப்பட்டாயே... அது நீண்டு வளர்ந்துவிட்டதா?... இப்போது சந்தோஷமா?...” என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது பஞ்சவர்ணக்கிளி.
அட சரிதான், தும்பிக்கை நீண்டுவிட்டதே... நாம் நினைத்தப்படி தும்பிக்கை மாறிவிட்டதை தன் அம்மாவிடம் சொல்லக் கிளம்பியது தம்பு.
மூலக்கதை: ருட்யார்டு கிப்ளிங்

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...