Skip to main content

ஈட்டனும் எழிலும்


அந்த டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.... “சொர்க் சொர்க்” என டீ ஆற்றும் சத்தமும், “சளக் சளக்” எனக் கண்ணாடி டம்ளர்கள் கழுவும் சத்தமும் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தன.
“அண்ணே ஸ்ட்ராங்க” ஒரு டீ... மீடியமா ஒரு டீ... சைனா டீ.. காபி, பால், மசாலா பால்” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்...
அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு அவரவர்களுக்குத் தேவையான பானங்களை டீ மாஸ்டர் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்...
இந்த டீக்கடையில் இருக்கும் சர்க்கரைச் சட்டியை நம்பி, ஈட்டன் என்ற ஈயும், எழில் என்ற எறும்பும் வாழ்ந்துவந்தன.
தனக்கு இறகுகள் இருப்பதாலும், எங்கு வேண்டுமானாலும் பறக்க முடியும் என்பதாலும் ஈட்டனுக்கு தற்பெருமை அதிகம். இதைச் சொல்லி எழிலை எப்போதும் கேலி செய்துகொண்டே இருக்கும். இதை ஈட்டன் வாடிக்கையாக வைத்திருந்தது.
எழில் இதையெல்லாம் பொருட்படுத்தாது. தனது வேலை மட்டுமே கதி என்று இருக்கும்.
ஒருநாள்…
“எழில்” என்று சத்தமாகக் காதருகே கூப்பிட்டு விட்டு ஒரு சர்க்கரைத் துண்டை எடுத்துக் கொண்டு விர்ரென்று பறந்து சென்றது ஈட்டன்.
வேகவேகமாக ஊர்ந்து கொண்டிருந்த எழில், தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி “என்ன” என்பது போலப் பார்த்தது. ஆனால் அது பார்ப்பதற்குள் ஈட்டன் மறைந்துவிட்டது. பிறகு மீண்டும் படக்கென்று பறந்து வந்து எழில் முன்பாக வந்து நின்றது.
“நான் எனது வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். வேலைச் செய்யுறப்ப தொந்தரவு செய்யாதேன்னு எத்தனை முறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்... ஏன் இப்படிச் செய்து என்னை வம்புக்கு இழுக்குறே?” என்று கோபமாகக் கேட்டது எழில்.
எழிலை ஒரு கேவலப் பார்வை பார்த்த ஈட்டன் “ஆமாம்! பெரிய வேலை... ஊருல இல்லாத வேலை... நீ இப்படி ஊர்ந்து ஊர்ந்து போய் ஒரு சர்க்கரைத் துண்டைக் கொண்டு போறதுக்குள்ள நான் நூறு துண்டுகளை சேர்த்துடுவேன்” என்று இளக்காரமாகச் சொன்னது.
ஈட்டனின் இந்த வார்த்தையைக் கேட்ட எழிலுக்கு ஒரே கோபம். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சர்க்கரைத் துண்டை வாயில் கவ்விக்கொண்டு சென்றது.
அதனைச் செல்ல விடாமல் முன்னே வந்து கத்தியும், காதோரம் ரீங்காரமிட்டும் தொல்லை கொடுத்தது ஈட்டன். பொறுமை இழந்து “இப்படிக் கேலி செய்யுறனே, உனக்கு ரோஷமே இல்லையா...” என்று சொல்லிச் சிரித்தது ஈட்டன்.
தான் தூக்கி வந்த சர்க்கரைத் துண்டைக் கீழே வைத்த எழில், இரு கைகளாலும் முகத்தைத் துடைத்துக்கொண்டது. கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தது. பின்பு சாந்தமாகப் பேச ஆரம்பித்தது.
“ஈட்டன்...! உன்னைப் போல என்னால பறக்க முடியாது. அது உண்மைதான்... ஆனால், அதுக்காக நான் எப்பவும் வருந்தியது இல்ல. உனக்கு இருக்கிறது எனக்கு இல்லையேன்னு பொறாமைப்பட்டதும் இல்ல. எங்களுக்கும் மிகச் சிறந்த உடலமைப்பு இயற்கையிலேயே இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இடைமறித்தது ஈட்டன்.
“என்னது, மிகச்சிறந்த இயற்கை உடலமைப்பா...! உன்னிடமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டது.
பொறுமையாகக் கண்களை மூடி ஆமோதித்த எழில் தொடர்ந்தது,
“உண்மைதான்... ஒருநாள் முழுக்க உழைக்குற சக்தியை இயற்கை எங்களுக்குக் கொடுத்திருக்கு... ஓய்வுன்னா என்னான்னே எங்களுக்குத் தெரியாது... உழைப்புக்கு உதாரணமா மனிதர்கள் எங்களைதான் சொல்லுறாங்க... ஒற்றுமையின் சின்னமாகவும் எங்களைத்தான் அவுங்க நினைக்கிறாங்க... ஆனால், உனக்கு இப்படிச் சிறப்புகள் இல்லை” என்று சொல்லிவிட்டு மீண்டும் சர்க்கரைக் கட்டியை வாயில் கவ்விக் கொண்டு புறப்படத் தயாரானது.
“நில்... நில்... நில்...” தன் இறகுகளை அகலமாக விரித்து வழிமறித்த ஈட்டன்... “ எங்களுக்குச் சிறப்பில்லை என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டது.
மெதுவாகச் சிரித்துக் கொண்ட எழில் சொன்னது. “அதோ அங்கே பாரேன்... அந்த டீ டம்ளரில் உன் நண்பன் ஒருவன் விழுந்துட்டான்னு அந்த டீயே வேண்டாம்னு ஒருத்தரு டீ கடைக்காரரிடம் சொல்கிறார் பார்... ‘ஏன் அதை எடுத்துப் போட்டுக் குடித்துவிடலாமே’ என்று நீ கேட்கலாம்... ஆனால் அவ்வாறு செய்ய மாட்டார்கள்... காரணம், உன்னைப் போன்றவர்கள் குப்பையிலும், சாக்கடையிலும் போய் உட்காருவீங்க... அப்புறம் சாப்பாடு மீதும் உட்காருவீங்க... அதனால்தான் ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடாதே... நோய் வரும்னு குழந்தைகளுக்கு அறிவுரை சொல்றாங்க...” என்று சொல்லி முடித்த எழில், வேகமாக நடந்து சென்றது.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்த ஈட்டன், எழிலையே பார்த்துக்கொண்டிருந்தது.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...