Skip to main content

குரலை நெரித்தஹெலிகாப்டர் சத்தம்

எஸ்.சஞ்சய்


எட்டுமணிக்கு வண்டி வந்துரும்... ரெடியா இருக்கனும். கைப்புள்ள வச்சிருக்கவங்க வீட்லயே இருந்துக்கங்க... அம்மா பேசிக்கிட்டிருக்கும்போது அழுதுச்சுன்னா ‘காவிரிய வச்சிக்கோ அம்மாவ குடு’ன்னு பிளக்ஸ் அடிச்சு ஊரு முழுக்க ஒட்டினது... பரப்பன அக்ஹரஹாரம் என்று பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து அம்மா மைண்டும் அங்க போயிரும். பேச்சும் மாறிடும்... அப்புறம் எங்க பொழப்பு நாறிடும்... அதனால சொல்றபடி கேளுங்க” என்று ஆரம்பித்தார் ஒன்றியத் தலைவர்.
அம்புட்டுபேரும் கோயில்மாடு கணக்கா தலைய ஆட்டுனாய்ங்க...
ஆத்துமணல் லோடு ஏத்துற அரைப்பாடி வண்டி வரும்... அம்புட்டுபேரும் ஏறிக்கங்க... ஏறும்போது எறநூறு ரூவா, ஒரு பிரியாணிப் பொட்டலம் தருவோம்... வாங்கிக்கிட்டு ஜாலியா போங்க... ஒரு மைதானத்துல எறக்கிவிடுவாங்க... சுத்தி மரங்க இருக்கனால வெயிலு தெரியாது... கொஞ்சநேரத்துல அம்மா வந்துருவாங்க... ஒருமணிநேரம் பேசுவாங்க.. அம்மாவக் கவனிக்கிறீங்களோ இல்லியோ... பக்கத்துல கோட்டு சூட்டு போட்ட ஒருத்தர கண்டிப்பா கவனிச்சே ஆகனும்... அவரு எப்ப கைய மேல தூக்கி கைதட்டுறாரோ அந்த நேரம் நல்லா கைதட்டனும்... அவ்ளதான்...” என்று சொன்னவர் கடிகாரத்தைப் பார்த்து “வண்டி வர்ற நேரமாயிருச்சுன்னு நெனைக்கிறேன்... நான் முன்னாடி கார்ல போறேன்... வந்து சேருங்க” என்றும் சொல்லிவிட்டு தனது அல்லக்கையிடம் சைகையில் எதையோ சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
கொஞ்ச நேரங்கழிச்சு கர்ரு முர்றுன்னு ஒரு வண்டி வந்திச்சு.
ஏலா மூக்காயி... ஏலா விருமாயி... ஏலா முத்துப்பேச்சி” என்று குரல்கள் காற்றில் பறக்க அனைவரும் சித்திரத்திர்ழாக்கு எடுத்த புதுச்சேலையைக் கட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகப் போனார்கள். சிறுவர்கள் முதல் பெரிசுகள் வரை பெரிய பண்டலில் வந்து இறங்கிய கரைவேட்டியில் ஆளுக்கு ஒண்ணை வாங்கிக் கொண்டு ஒரு பெரிய மரத்தின் மறைவில் நின்று கட்டிக் கொண்டு ஓடினார்கள்.
வண்டி தேர்தலை மனதில் வைத்துப் போடப்பட்ட புது ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தது. சில அரசல் புரசல் லவ்ஸ் பேச்சுக்கள் ஆங்காங்கே வெளிப்பட்டன. இப்படியே ஒரு மணிநேர பயணத்திற்குப் பிறகு வண்டி ஆள் அரவமற்ற ஒரு பொட்டலில் நின்றது. கொஞ்சம் கொஞ்சமாக லாரிகள் வர ஆரம்பித்தன. மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார்கள்.
வெய்யில் ஏறத் தொடங்கியது. 10 மணி, 11 மணி, 12 மணி என்று ஏற ஏற கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்கள் தீரத் தொடங்கின. பிரியாணிப் பொட்டலங்கள் உள்ளே சென்றன. தண்ணீர் தண்ணீர் என்று அங்கேயும் இங்கேயும் குரல்கள் கேட்டன.
அம்மாவை வாழ்த்தும் பாடல்கள் பாடப்பட்டன. டான்ஸ் கீன்ஸ் ஆடுவார்கள் என்று இளைஞர்கள் எதிர்பார்த்தார்கள். செவிக்குத்தான் உணவு கிடைத்ததே தவிர கண்களுக்கு ஒண்ணும் கிடைக்காமல் போனதால் அவர்கள் உலவிக் கொண்டிருந்தார்கள்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது... ஒரு பாட்டி மிகுந்த கோவத்தில் “அம்மா எப்பய்யா வருவாங்க?” என்று கேட்டார்.
வந்துக்கிட்டே இருக்காங்க...” என்று சங்கடப்பட்டார் அந்தக் கரைவேட்டி.
மணி மூன்றாகியது... அவரவர்கள் அங்கேயே படுத்து உறங்கினார்கள். அவர்களின் நீராகாரம் எல்லாம் ஆவியாக காற்றில் கலந்தது.
நான் உங்களோடே இருக்கிறேன்” என்ற குரல் கேட்டு சிலர் எழுந்தார்கள். பலர் எழுப்பிவிடப்பட்டார்கள்.
ஹே என்ற கைதட்டல்கள். அம்மா வந்து விட்டார், அம்மா வந்து விட்டார் , அம்மா வந்து விட்டார், அம்மா வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
எனனய்யா மாயமா இருக்கு...? நான் கண்ணுமுழிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்... அதுக்குள்ள எப்டியா வந்தாங்க?” என்று ஒருவருக்கு தலை சுற்றியது.
அம்மா பேச ஆரம்பிக்க ஆரம்பிக்க அனைவரும் பக்கத்தில் நின்றவரைப் பார்த்தார்கள். அவர் பேசாமல் இருந்தார். இவர்களும் பேசாமல் இருந்தார்கள். அவர் திடீரென்று தட்ட ஆரம்பித்தார். அப்போது இவர்களும் கைதட்ட ஆரம்பித்தார்கள்.
இப்படியே ஒருமணிநேரம் போனது... பேச்சும் முடிந்தது.
என்ன பேசினார் எதற்குக் கை தட்டினோம் என்பதுகூட புரியாமல் அனைவரும் எழுந்து பெரிய கும்பிடாய் போட்டார்கள்.
மெவாகக் கலைந்தார்கள். இரு பெண்கள் மட்டும் எழுந்திருக்கவேயில்லை.
தட்டினார்கள்..
முதுகைப் பிடித்து உலுக்கினார்கள்...
தண்ணீர் தெளித்தார்கள்...
எதுவும் நடக்கவில்லை... சலனமற்றுக் கிடந்தார்கள்.

எப்போதும் உங்களோடே இருக்கிறேன்னு சொன்னீங்களே எங்கம்மா இருக்கீங்க?” என்று இவர்கள் எழுப்பிய ஒலி அந்த ஹெலிகாப்டர் சத்தத்தில் யாருக்கும் கேட்கவே இல்லை.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

சாதனை மாணவி

"அம்மா நான் மேற்கொண்டு படிக்கப்போறேன்" குரலைத் தாழ்த்திக் கொண்டு அந்த 15 வயது சிறுமி கேட்கிறாள். சற்றே அவளை ஏற இறங்கப் பார்த்த அவளின் தாய், "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல... இனிமே படிச்சு என்ன கிழிக்கப்போற..." என்று அந்த எண்ணத்தைச் சிதறடிக்கிறாள்... இதேபோன்று தொடர்ச்சியான கெஞ்சல்கள்...  ஒருநாள்... அந்தத் தாயும், சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தகப்பனும் பிள்ளையின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அந்தத் தாய் சொன்ன "புருஷன் கூட ஒழுங்கா வாழ துப்பில்ல..." என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களின் தலையைக் குடைகிறதா....? விஷயத்திற்கு வருவோம். படத்தில் காணப்படும் இந்த சிறுமியின் பெயர் ஜெயபிரபா...  மேலூர் மாவட்டம் நொண்டி கோவில்பட்டி கிராமம் இவரது சொந்த ஊர்.  அந்த ஊரில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவிட்டால், உடனே தாய்மாமன்களுக்கு திருமணம் முடித்து விடுவது வழக்கம். இதே நிலைதான் ஜெயபிரபாவுக்கும் ஏற்பட்டது.  தாய்மாமனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணம் முடிந்த விஷயம் கேள்விப்பட்டதும் பள்ளியிலிருந்து இவரின் பெயரை நீக்கி...

பேஸ் புக்கில் நான் இட்ட பதிவுகளில் எனக்குப் பிடித்தவை இங்கே....

செல்போனில் சஞ்சய் எம்.சி.,(மதுரைக்கல்லூரி), சஞ்சய் சித்தப்பா. சஞ்சய் சார். சஞ்சய் மீடியா, சஞ்சய் அண்ணா. மாப்ள சஞ்சய், சஞ்சய் மாமா, சஞ்சய் தம்பி, டிசைனர் சஞ்சய் என்று என் பெயரை பல விதங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள்...  ஆனால் செல் நம்பர் ஒண்ணுதான்... அதுமாதிரிதான் வாழ்க்கையும், நம்மள பலபேர் பல விதமா சொல்லுவாங்க... ஆனா நம்ம ஒரிஜினாலிட்டி மாறவே மாறாது... மாத்தவும் கூடாது... ---------------------------------------- நாம ஸ்கூல்ல படிக்கும்போது... சில நேரங்கள்ல நாம எழுதுன டெஸ்ட் பேப்பர, வாத்தியார் திருத்தாம நமமளுக்குள்ளேயே திருத்தச் சொல்லுவாறு...  உன்கிட்ட யார் பேப்பர் இருக்கு...  உன் பேப்பர் யாருக்கிட்ட இருக்குன்னு உனக்குத் தெரியும்...  உடனே தனக்குப் பிடிச்ச நண்பன் பேப்பர் யாருகிட்ட இருக்கோ அத ரகசியமா பேசி வாங்கி ஆசையா மார்க் போடுவ... உன் நண்பனும் அதையே செய்வோன்... இப்படி ஸ்கூலில் நடந்ததை நம் வீட்டு நண்பர்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கிருவ... இதில் உனக்கு ஒரு சந்தோஷம்...  இதெல்லாம் ஒரு 15-20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இந்த விஷயத்தை அ...