Skip to main content

மேய்ப்பர் யார்?

----------------------------------

“ஆடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம்“
இது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தகுந்த அம்சம்.
இதுசம்பந்தமாக ஆடு மேய்க்கும் ஒரு பையனிடம் பகல் 10 மணிக்கு ஆபீஸ் ஆரம்பிக்கும் நேரத்தில் கேட்டபோது “உங்ககிட்ட பேசிக்கிட்டிருந்தா ஆடுக காணாமப் போயிரும்... அடுத்தவன் வுட்டு நெலத்துல வாய வச்சுச்சுன்னா நாந்தான் தெண்டங்கட்டனும்... சாயந்தரமா வாங்க”ன்னுட்டான்.
நம்மளவிட பிஸியான ஆளா இருப்பான்போலனு பொழுதுசாய அவன மீட் பண்ணலாம்னு பாத்தா, அப்பவும் அவன் பயங்கர பிஸி.
பட்டியில் சேர்ந்த ஆடுகளை கண்களாலேயே அளவெடுத்தான்... அவனுக்கு எண்ணத் தெரியாது... ஆனால் எல்லா ஆடுகளின் அடையாளமும் தெரியும்... ஒண்ணொண்ணுக்கும் அடையாளம் வச்சிருப்பான்.
‘வாய்ல மட்டும் வெள்ளை விழுந்த ஆடு, கொம்பு நெளிஞ்ச ஆடு, காது சுருங்குன ஆடு’ இப்டின்னு...
அதுபடி பாக்கும் போது காது சுருங்குன ஆட்டக் காணாம்... அது எங்கனுன்னு தேடிப்போனான். நான் பின்னாடியே போனேன்...
அந்த ஆடு அஜய்குமாரோட (என்னடா கிராமத்துல அஜய்குமாரா னு கேக்காதீங்க... இங்க அஜித் குமார், நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்றெல்லாம்கூட பெயர்கள் இருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் கோபர்நிகஸ் என்ற வார்த்தையை குளோப்ஜாம் என்று கூப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்)  நெலத்துல விளைஞ்ச கம்மங்கருத கடிச்சிருச்சின்னு புடிச்சி வச்சிக்கிட்டான்...
என் கூட பேசுனா தெண்டங்கட்டனும்னு சொன்னான்... வேற யாரோ என்ன மாதிரி அடுத்ததா அறிக்கை பத்தி விசாரிக்க வந்திருப்பான் போலன்னு நினைச்சிக்கிட்டேன்...
ஒருவழியா மன்னிப்புக் கேட்டு, கடிச்சி வச்ச கருதுக்கெல்லாம் கணக்குப் பாத்து காசு குடுத்திட்டு வந்தபிறகு என் பக்கத்துல உக்காந்தான்.
“பத்திங்களா எங்க பொழப்ப?” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு “இப்ப என்னய்யா வேணும் உனக்கு?” என்றான்.
“ஆடு மேய்ப்பதை அரசு வேலை ஆக்குவோம்னு சீ” என்று சொல்லி முடிப்பதற்குள்...
“அடச்சீ நிறுத்துய்யா... என்னை ஒழுங்கா படிக்க வச்சிருந்தா நான் ஏன்யா ஆடு மேய்க்கிறேன்...” என்று சொல்லி கோபத்தோடு எழுந்திருக்க முயன்றான்...
“இருப்பா... கோபப்படாத” என்று அமர்த்தினேன்...
“ஆடு மேய்க்கிறத அரசு வேலையா ஆக்குவோம்ன்றீங்க... குப்பை அள்ளுறதுகூடதான் அரசு வேலை... அதை நீ செய்வியா? அதுக்குன்னு ஒரு சமூகத்தை தான வச்சிருக்கீங்க? எங்கள மேலும் மேலும் இதுக கூடயே வாழ வைக்கணும்... எந்த பெரிய வேலைக்கும் நாங்க போயிறக்கூடாது... அப்டித்தான?” என்று சொல்லிவிட்டு போயே விட்டான்...
ஆடுகள் “மே...16” என்று கத்தின.

Comments

Popular posts from this blog

சமூகநீதிக் காவலர்

ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் தோற்றம் கொண்டிருந்தார்கள்... நீங்கள் நூற்றாண்டு கடந்த கல்லூரிகளுக்குச் சென்று பார்த்தால் பெரிய பெரிய புகைப்படங்களை மாட்டியிருப்பார்கள் அதில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் உடை, பாவனைகளை வைத்தே அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். சகலத்திலும் உயர்ந்த பதவிகளை எல்லாம் அவர்களே அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்கான வாழ்வாங்கு சாட்சி அது... ஆனால் இப்போது கல்விநிலையங்கள், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் முதல் அடிப்படை பணியாளர் வரை எத்தனை விதமான முகங்கள்... எத்தனை விதமான தோற்றங்கள்... எத்தனை விதமான நடை, உடை, பாவனைகள்... தமிழ்மொழியே ஆனாலும் விதவிதமான பேச்சுத் தொணிகள்... இவை அனைத்தையும் நாம் கண்டும் கேட்டும் வருகிறோம்...  கண்கொள்ளாக் காட்சியல்லவா இது...  திடீரென்று மலர்ந்து விட்டதா இந்த சமூகமாற்றங்கள்... என்னதான் நடந்தது... இதற்குப் பின்னே? 1990ம் ஆண்டு இதே ஜூன் மாதம்.... பிரதமர்...

கேள்விகள் - சிறுகதை

கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி, புஸ் புஸ்னு பூரி மாதிரி இருக்கும் அவளோட கன்னம். தேங்காச்சில்லக் கொண்டாந்து அவ பல்லுக்கிட்டக்க வச்சுப்பாத்தோம்னு வச்சுக்குங்க... சில்லு எது? பல்லு எது?ன்னு கொழம்பிப்போற அளவுக்கு அம்புட்டு வெள்ளைவெளேர்னு இருக்கும் அவளோட பல்லு... அறிவுக்கொழுந்துன்னுவாகளே... அது அவ விஷயத்துல கரெக்கட்டுதான்... அப்படிப்பட்ட அறிவுக்கொழுந்து அவ... அவ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லத்தெரிஞ்சவுக ஊருக்குள்ள ஒருத்தருமில்லன்னா பாத்துக்குங்க... என்னத்தையாவது கேட்டுப்புடுவா... கேட்டவுக திருத்திருன்னு முழிக்கிற முழியப் பாக்கணுமே... பாவமா கெடக்கும் அதப்பாக்குறவங்களுக்கு... அன்னிக்கு ஒருநா கன்னிமயிலு வீட்டுக்குள்ள சருவப்பானைய கவுத்துப்போட்டு உக்காந்துக்கிட்டு பிளேடு கத்தியால நெகம் வெட்டிக்கிட்டிருந்தா... அவளோட ஆத்தாக்காரி அன்னபாக்கியம் பதறிப்போயி, அவக்கிட்டக்க ஓடியாந்து "அடி கூறுகெட்டவளே...! வீட்டுக்குள்ள நெகம் வெட்டிப்போடுறவ... தரித்திரன்டி... வீடே வெளங்காமப்போயிரும்டி......

மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில பிரநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த போது அண்ணா மெட்ராஸ் என்பதை "தமிழ்நாடு" என்று மாற்றினார். உத்தரப்பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை "இந்துஸ்தான்" என் று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இஸ்துஸ்தான் என்று வைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி அந்த பெயரை நிராகரித்தார் நேரு. "ராம்ராஜ்யம்" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்க தெரியாதா? என்று கேட்டபோது உத்தரப்பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் "உயரே" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.... தங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப்பிரதேசம்.  நிற்க... இந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அ...