பச்சை முண்டாசு
“வணக்கம்ணே” என்-று சொல்லிவிட்டு அரசமர நிழலில் பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார் பாண்டி.
பாண்டிக்கு விவசாயத்தைத் தவிர ஒண்ணுந்த தெரியாது. செடி கொடிககூடத்தான் அவர் பேச்சு பொழப்பு எல்லாம்.
சில நேரம் வந்து அரசமரத்து நிழல்ல குந்துவார். அப்போதைக்கு அங்கு யாரு இருக்காங்களோ அவுங்ககிட்ட அரசியல் நிலவரம் பற்றி கேட்டுக்குவார்.
அவருக்கு ரெம்பவும் பிடிச்சவரும், அரசியல் நிகழ்வுகளை அள்ளிக் குடிச்சவரும் ஆன கோமாளி (பேரே அதுது£ன்)தான்.
அவருக்குத்தான் வணக்கம் சொல்லி விட்டு குந்தினார்.
“என்னண்ணே வணக்கம் பெருசா இருக்கு” என்று கேட்டு விட்டு மீசையைத் தடவி ஒரு சிரிப்பு சிரித்தார்.
ஒரு நாளிதழ் பக்கத்தில் கிடந்தது.
அவருக்குப் படிக்கத் தெரியாது. ஆனாலும் படம் பார்த்து, அதில் சுவராஷ்யமா எதாச்சும் இருந்தா படிக்கச் சொல்லி கேட்டுக்குவார்.
“இந்தப் பச்சத்துண்ட தலைல முண்டாசு கட்னவரு என்னண்ணே சொல்றாரு...?” என்றார்.
“விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வரை, தலையில் கட்டி இருக்கும் பச்சை துண்டை அவிழ்ப்பதில்லை என்று சபதம் ஏற்றுள்ளேன்-” மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடியில் திடீர் அறிவிப்பு”
என்று சத்தமாய்ப் படித்தார் கோமாளி.
முகம் சிறுத்தது.
கொஞ்சநேரம் பேசாம இருந்தார்.
பின்பு மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.
“அண்ணே ஒங்களுக்குத் தெரியாதது இல்ல. மண்ணை தோண்டுறவன் பொழப்பு எப்படிப் பட்டதுன்னு? ஆனா இவங்க மாதிரி ஆளுங்க இப்டியெல்லாம் சபதமேத்துக்கிறதால யாருக்கு நன்மை கெடச்சிரும்?
பேஞ்சு கெடுக்குது... பேயாமயும் கெடுக்குது... வானத்தப் பார்த்து நிக்கிற நமக்கு இந்த மாதிரி ஆளுங்கனால ஏதாச்சும் கெடச்சிருக்கா...
இவனுங்கள நம்பி போராட்டத்துக்கு போயி அன்னிக்கு பொழப்பு கெட்டதுதான் மிச்சம். ஆனா இவ்ளோ விவசாயிகள் என் பின்னாடி இருக்கிறதா இவனுங்க மட்டும் கல்லா கட்டீடுறானுங்க...
இந்த ஆளெல்லாம் 20 வருஷமா எலக்ஷன்லயே நிக்கல... இப்பத்தான் நிக்கிறாரு... இத்தனை வருஷமா எப்படிண்ணே அந்த ஆளு பொழப்பு ஓடுது... யோசிச்சாய்ங்களா...
பதவியில இருக்கவந்தான் அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டயப்போட்டுட்டு பொழப்பு நடத்துறான்... இவனுங்க மாதிரி ஆளுகளுக்கு எங்க இருந்துண்ணே கெடைக்கிறது காசு?...
இப்டியெல்லாம் பேசிப்பேசியே நம்மள வச்சி அவனுங்க வாழ்றானுங்கண்ணே”
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் குடித்துக் கொண்டார். “அண்ணே ஒரு டீ சாப்டலாமா?”என்றும் கேட்டார்.
“சாப்டுவோம்ணே” என்று கோமாளியும் சொல்ல... இவரின் பார்வையை குறிப்பால் உணர்ந்த பொட்டிக்கடைக்காரர் “பெரிசு ரெம்ப கோவமா இருக்குபோல” என்று கோமாளியின் காதைக் கடித்துவிட்டு டீ கொண்டு வந்து கொடுத்தார்.
டீயை உறிஞ்சிய பாண்டி,
“இதுதான்... இப்டித்தான் என்று பட்டுன்னு சொல்றவன நம்பலாம்... ஆனா இந்த ஆளு மாதிரி உணர்ச்சி வசமா பேசுறவங்கள எந்தக்காலத்துலயும் நம்பக்கூடாது... குடியக் கெடுத்துருவானுங்க... என்னைக்கும் நம்மளோட இருக்கிற ஆளுதாண்ணே நம்மளுக்கு வேணும்...” என்று சொல்லிவிட்டு டீக்கு காசு கொடுத்துக் கொடுக்கப் போனார்.
மரத்திலிருந்து காய்ந்த இலைகள் கீழே விழுந்து கொண்டிருந்தன.
Comments
Post a Comment